திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.24 திருவாரூர் - திருத்தாண்டகம்
கைம்மான மகதளிற்றி னுரிவை யான்காண்
    கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றியான் காண்
அம்மான்காண் ஆடாவொன் றாட்டி னான்காண்
    அனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண்
எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண்
    எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண்
செம்மானத் தொளியன்ன மேனி யான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
1
ஊனேறு படுதலையில் உண்டி யான்காண்
    ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண்
ஆனேறொன் றூர்ந்துழலும் ஐயா றன்காண்
    அண்டன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண்
    மாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண்

தேனேறும் மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
2
ஏவணத்த சிலையான்முப் புரமெய் தான்காண்
    இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண்
    சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் றான்காண்
ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்
    அனலாடி காண்அடியார்க் கமிர்தா னான்காண்
தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
3
கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண்
    கொடுமழுவன் காண்கொல்லை வெள்ளேற் றான்காண்
எங்கள்பாற் றுயர்கெடுக்கு மெம்பி ரான்காண்
    ஏழ்கடலும் ஏழ்மலையு மாயி னான்காண்
பொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் றான்காண்
    பொற்றூண்காண் செம்பவளத் திரள்போல் வான்காண்
செங்கண்வா ளராமதியோ டுடன்வைத்த தான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
4
காரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண்
    கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
போரேறு நெடுங்கொடிமே லுயர்த்தினான்காண்
    புண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண்
நீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண்
    நின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண்
சீரேறு திருமாலோர் பாகத் தான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
5
பிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண்
    பிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண்
கறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண்
    கழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபா லிகாண்
இறையுருவக் கனவளையாள் இடப்பா கன்காண்
    இருநிலன்காண் இருநிலத்துக் கியல்பா னான்காண்
சிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
6
தலையுருவச் சிரமாலை சூடி னான்காண்
    தமருலகந் தலைகலனாப் பலிகொள் வான்காண்
அலையுருவச் சுடராழி ஆக்கி னான்காண்
    அவ்வாழி நெடுமாலுக் கருளி னான்காண்
கொலையுருவக் கூற்றுதைத்த கொள்கை யான்காண்
    கூரெரிநீர் மண்ணொடுகாற் றாயி னான்காண்
சிலையுருவச் சரந்துரந்த திறத்தி னான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
7
ஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண்
    அடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து
கையன்காண் கடற்பூதப் படையி னான்காண்
    கண்ணெரியால் ஐங்கணையோ னுடல்காய்ந் தான்காண்
வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண்
    வெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண்
செய்யன்காண் கரியன்காண் வெளியோன் றான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
8
மலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண்
    மயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண்
இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்
    இறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண்
கொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண்
    கொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண்
சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
9
பொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண்
    புரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண்
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்காண்
    மறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண்
எற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண்
    இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.25 திருவாரூர் - திருத்தாண்டகம்
உயிரா வணமிருந் துற்று நோக்கி
    உள்ளக் கிழியி னுரு வெழுதி
உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
    உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி
அயிரா வணமேறா தானே றேறி
    அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட
அயிரா வணமேயென் னம்மா னேநின்
    அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.
1
எழுது கொடியிடையார் ஏழை மென்றோள்
    இளையார்கள் நம்மை இகழா முன்னம்
பழுது படநினையேல் பாவி நெஞ்சே
    பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ
முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி
    முடியா லுறவணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய
    இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.
2
தேரூரார் மாவூரார் திங்க ளூரார்
    திகழ்புன் சடைமுடிமேற் றிங்கள் சூடிக்
காரூரா நின்ற கழனிச் சாயற்
    கண்ணார்ந்த மாடங் கலந்து தோன்றும்
ஓரூரா உலகெலா மொப்பக் கூடி
    உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின் றார்கள்
    அமரர்கள்தம் பெருமானே எங்குற் றாயே.
3
கோவணமோ தோலோ உடை யாவது
    கொல்லேறோ வேழமோ ஊர்வ துதான்
பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்
    பொருந்தாதார் வாழ்க்கை திருந்தா மையோ
தீவணத்த செஞ்சடைமேற் றிங்கள் சூடித்
    திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்
    அறியேன்மற் றூராமா றாரூர் தானே.
4
ஏந்து மழுவாளர் இன்னம் பரார்
    எரிபவள வண்ணர் குடமூக் கிலார்
வாய்ந்த வளைக்கையாள் பாக மாக
    வார்சடையார் வந்து வலஞ்சு ழியார்
போந்தா ரடிகள் புறம்ப யத்தே
    புகலூர்க்கே போயினார் போரே றேறி
ஆய்ந்தே யிருப்பார்போய் ஆரூர் புக்கார்
    அண்ணலார் செய்கின்ற கண்மா யமே.
5
கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை
    கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால்
    வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்
மருவாகி நின்னடியே மறவே னம்மான்
    மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணந்
திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்
    செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே.
6
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே.
7
ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா
    அவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப்
பாடுவார் தும்புருவும் நார தாதி
    பரவுவார் அமரர்களு மமரர் கோனுந்
தேடுவார் திருமாலும் நான்மு கனுந்
    தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளுங்
கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்
    குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே.
8
நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்
    நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி
ஓரூரு மொழியாமே ஒற்றித் தெங்கும்
    உலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான்
தேரூரும் நெடுவீதி பற்றி நின்று
    திருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா
தாரூரா ஆரூரா என்கின் றார்கள்
    அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே.
9
நல்லூரே நன்றாக நட்ட மிட்டு
    நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்
பல்லாரும் பலிதிரிந்து சேற்றார் மீதே
    பலர்காணத் தலையாலங் காட்டி னூடே
இல்லார்ந்த பெருவேளூர்த் தனியே பேணி
    இராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு
எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண
    இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.
10
கருத்துத்திக் கதநாகங் கையி லேந்திக்
    கருவரைபோற் களியானை கதறக் கையால்
உரித்தெடுத்துச் சிவந்ததன்றோல் பொருந்த மூடி
    உமையவனை அச்சுறுத்தும் ஒளிகொள் மேனித்
திருத்துருத்தி திருப்பழனந் திருநெய்த்தானம்
    திருவையா றிடங்கொண்ட செல்வர் இந்நாள்
அரிப்பெருத்த வெள்ளேற்றை அடர ஏறி
    அப்பனார் இப்பருவ மாரூ ராரே.
11
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.26 திருவாரூர் - திருத்தாண்டகம்
பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப்
    பண்டொருகால் தசமுகனை அழுவித் தானை
வாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானை
    வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைச்
சோதிச்சந் திரன்மேனி மறுச்செய்தானைச்
    சுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானை
ஆதித்தன் பற்கொண்ட அம்மான் றன்னை
    ஆரூரிற் கண்டடியேன் அயர்ந்த வாறே.
1
வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை
    விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி
ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் றன்னை
    ஓதாதே வேத முணர்ந்தான் றன்னை
அப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் றன்னை
    அமுதுண்டார் உலந்தாலு முலவா தானை
அப்புறுத்த நீரகத்தே அழலா னானை
    ஆரூரிற் கண்டடியேன் அயர்ந்த வாறே.
2
ஒருகாலத் தொருதேவர் கண்கொண் டானை
    ஊழிதோ றூழி உயர்ந்தான் றன்னை
வருகாலஞ் செல்கால மாயி னானை
    வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைப்
பொருவேழக் களிற்றுரிவைப் போர்வை யானைப்
    புள்ளரைய னுடல்தன்னைப் பொடிசெய் தானை
அருவேள்வி தகர்த்தெச்சன் றலைகொண் டானை
    ஆரூரிற் கண்டடியேன் அயர்ந்த வாறே.
3
மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
    வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
ஒப்பானை ஒப்பிலா ஒருவன் றன்னை
    உத்தமனை நித்திலத்தை உலக மெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப் பானை
    வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை
    ஆரூரிற் கண்டடியேன் அயர்ந்த வாறே.
4
பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றைப்
    பிண்டத்தைப் படைத்ததனைப் பெரிய வேதத்
துண்டத்தில் துணிபொருளைச் சுடுதீ யாகிச்
    சுழல்காலாய் நீராகிப் பாரா யிற்றைக்
கண்டத்தில் தீதினஞ் சமுது செய்து
    கண்மூன்று படைத்ததொரு கரும்பைப் பாலை
அண்டத்துக் கப்புறத்தார் தமக்கு வித்தை
    ஆரூரிற் கண்டடியேன் அயர்ந்த வாறே.
5
நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்
    நிறைகாலாய் இவையிற்றின் நியம மாகிப்
பாதியாய் ஒன்றாகி இரண்டாய் மூன்றாய்
    பரமாணு வாய்ப்பழுத்த பண்க ளாகிச்
சோதியாய் இருளாகிச் சுவைக ளாகிச்
    சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்
ஆதியாய் அந்தமாய் நின்றான் றன்னை
    ஆரூரிற் கண்டடியேன் அயர்ந்த வாறே.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.27 திருவாரூர் - திருத்தாண்டகம்
பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
    புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்
    கில்லையே கிடந்துதான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
    தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வான் உழிதர் கின்றேன்
    இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.
1
ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்
    றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்
உம்பரமே உம்வசமே ஆக்க வல்லீர்க்
    கில்லையே னுகர்போகம் யானேல் வானோர்
உம்பருமாய் ஊழியுமாய் உலகே ழாகி
    ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்
தம்பெருமா னார்நின்ற அரனைக் காண்பேன்
    தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே.
2
சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச்
    செழுங்கணால் நோக்குமிது வூக்க மன்று
பல்லுருவிற் றொழில்பூண்ட பஞ்ச பூதப்
    பளகீரும் வசமன்றே பாரே லெல்லாஞ்
சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த்
    தூநயன மூன்றாகி ஆண்ட ஆரூர்
நல்லுருவிற் சிவனடியே அடைவேன் நும்மால்
    நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே.
3
உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
    துறுப்பினது குறிப்பாகும் ஐவீர் நுங்கள்
மன்னுருவத் தியற்கைளால் வைப்பீர்க் கையோ
    வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
    புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
தன்னுருவைத் தந்தவனை எந்தை தன்னைத்
    தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.
4
துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க
    சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பினையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்
    உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே என்றன்
வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்
    மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்
அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும்
    ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.
5
பொங்குமத மானமே ஆர்வச் செற்றக்
    குரோதமே உலோபமே பொறையே நீங்கள்
உங்கள்பெரு மாநிலத்தின் எல்லை யெல்லாம்
    உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல்
அங்கமலத் தயனொடுமா லாகி மற்றும்
    அதற்கப்பா லொன்றாகி அறிய வொண்ணாச்
செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை ஆரூர்ச்
    செல்வனைச்சேர் வேனும்மாற் செலுத்து ணேனே.
6
இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை
    வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக்
குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள்
    குறிநின்ற தமையாதே யானேல் வானோர்
அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை
    அமரர்கள்தம் பெருமானை அரனை ஆரூர்
உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால்
    ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.
7
விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா
    வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரந்தோடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க்
    கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
கரைந்தோட வருநஞ்சை அமுது செய்த
    கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரிற்
பரஞ்சோதி தனைக்காண்பேன் படேனும் பண்பிற்
    பரிந்தோடி யோட்டந்து பகட்டேன் மின்னே.
8
மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச
    முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி
நாள்வாயு நும்முடைய மம்ம ராணை
    நடாத்துகின்றீர்க் கமையாதே யானேல் வானோர்
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
    நெடுந்தூணைப் பாதாளக் கருவை ஆரூர்
ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால்
    ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.
9
சுருக்கமொடு பெருக்கநிலை நீத்தல் பற்றித்
    துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச்
செருக்கிமிகை செலுத்தியும் செய்கை வைகல்
    செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க
தருக்கிமிக வரையெடுத்த அரக்க னாகத்
    தளரவடி எடுத்தவன்றன் பாடல் கேட்டு
இரக்கமெழுந் தருளியவெம் பெருமான் பாதத்
    திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.28 திருவாரூர் - திருத்தாண்டகம்
நீற்றிணையும் நெற்றிமே லிட்டார் போலும்
    நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலும்
காற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங்
    கண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலும்
கூற்றினையுங் குரைகழலா லுதைத்தார் போலுங்
    கொல்புலித்தோ லாடைக் குழகர் போலும்
ஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
    அணியாரூர்த் திருமூலட் டான னாரே.
1
பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும்
    பாசுபதம் பார்த்தற் களித்தார் போலும்
கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலுங்
    காபாலாங் கட்டங்கக் கொடியார் போலும்
பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும்
    பேர்நந்தி யென்னும் பெயரார் போலும்
அரியதோர் அரணங்க ளட்டார் போலும்
    அணியாரூர்த் திருமூலட் டான னாரே.
2
துணியுடையார் தோருடைய ரென்பார் போலுந்
    தூய திருமேனிச் செல்வர் போலும்
பிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும்
    பேசுவார்க் கெல்லாம் பெரியார் போலும்
மணியுடைய மாநாக மார்ப்பார் போலும்
    வாசுகிமா நாணாக வைத்தார் போலும்
அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும்
    அணியாரூர்த் திருமூலட் டான னாரே.
3
ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும்
    ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும்
நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும்
    ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலுங்
காட்டகத்தே ஆட லுடையார் போலுங்
    காமரங்கள் பாடித் திரிவார் போலும்
ஆட்டகத்தில் ஆனைந் துகந்தார் போலும்
    அணியாரூர்த் திருமூலட் டான னாரே.
4
ஏனத் திளமருப்புப் பூண்டார் போலும்
    இமையவர்க ளேத்த இருந்தார் போலும்
கானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங்
    கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
வானத் திளமதிசேர் சடையார் போலும்
    வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும்
ஆனத்து முன்னெழுந்தாய் நின்றாய் போலும்
    அணியாரூர்த் திருமூலட் டான னாரே.
5
காமனையுங் கரியாகக் காய்ந்தார் போலுங்
    கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
சோமனையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலுஞ்
    சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும்
நாமனையும் வேதத்தார் தாமே போலும்
    நங்கையோர் பால்மகிழ்ந்த நம்பர் போலும்
ஆமனையுந்த திருமுடியார் தாமே போலும்
    அணியாரூர்த் திருமூலட் டான னாரே.
6
முடியார் மதியரவம் வைத்தார் போலும்
    மூவுலகுந் தாமேயாய் நின்றார் போலும்
செடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலுஞ்
    செல்கதி தான்கண்ட சிவனார் போலும்
கடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலுங்
    கங்காள வேடக் கருத்தர் போலும்
அடியார் அடிமை உகப்பார் போலும்
    அணியாரூர்த் திருமூலட் டான னாரே.
7
இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும்
    இமையவர்கள் வந்திறைஞ்சு மிறைவர் போலும்
சுந்தரத்த பொடிதன்னைத் துதைத்தார் போலுந்
    தூத்தூய திருமேனித் தோன்றல் போலும்
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும்
    மாநாகம் நாணாக வளைத்தார் போலும்
அந்திரத்தே அணியாநஞ் சுண்டார் போலும்
    அணியாரூர்த் திருமூலட் டான னாரே.
8
பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும்
    பிறவி யிறவி இலாதார் போலும்
முண்டத்து முக்கண் ணுடையார் போலும்
    முழுநீறு பூசும் முதல்வர் போலும்
கண்டத் திறையே கறுத்தார் போலுங்
    காளத்தி காரோணம் மேயார் போலும்
அண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும்
    அணியாரூர்த் திருமூலட் டான னாரே.
9
ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும்
    ஊழி பலகண் டிருந்தார் போலும்
பெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும்
    பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்
    உகப்பார்தம் மனத்தென்றும் நீங்கார் போலும்
அருகாக வந்தென்னை அஞ்ச லென்பார்
    அணியாரூர்த் திருமூலட் டான னாரே.
10
நன்றாக நடைபலவும் நவின்றார் போலும்
    ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும்
கொன்றாகிக் கொன்றதொன் றுண்டார் போலுங்
    கோளரக்கர் கோன்றலைகள் குறைத்தார் போலும்
சென்றார் திரிபுரங்க ளெய்தார் போலுந்
    திசையனைத்து மாயனைத்து மானார் போலும்
அன்றாகில் ஆயிரம் பேரார் போலும்
    அணியாரூர்த் திருமூலட் டான னாரே.
11
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.29 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்
    தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறல்
குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை
    கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்
    பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும்
அருமணியை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்ந்த வாறே.
1
பொன்னேபோற் றிருமேனி உடையான் றன்னைப்
    பொங்குவெண் ணூலானைப் புனிதன் றன்னை
மின்னானை மின்னிடையாள் பாகன் றன்னை
    வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் றன்னைத்
தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
    தத்துவனை உத்தமனைத் தழல்போல் மேனி
அன்னானை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்ந்த வாறே.
2
ஏற்றானை ஏழுலகு மானான் றன்னை
    ஏழ்கடலு மேழ்மலையு மானான் றன்னைக்
கூற்றானைக் கூற்ற முதைத்தான் றன்னைக்
    கொடுமழுவாள் கொண்டதோர் கையான் றன்னைக்
காற்றானைத் தீயானை நீரு மாகிக்
    கடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ள
ஆற்றானை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்ந்த வாறே.
3
முந்திய வல்வினைகள் தீர்ப்பான் றன்னை
    மூவாத மேனிமுக் கண்ணி னானைச்
சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச்
    சங்கரனைச் சங்கக் குழையான் றன்னை
மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
    மறுமையு மிம்மையு மானான் றன்னை
அந்திரனை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்ந்த வாறே.
4
பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப்
    பித்தனாய்ப் பத்தர் மனத்தி னுள்ளே
உறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில்
    ஓரிபல விடநட்ட மாடி னானைத்
துறநெறியாய்த் தூபமாய்த் தோற்ற மாகி
    நாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்ற
அறநெறியை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்ந்த வாறே.
5
பழகிய வல்வினைகள் பாற்று வானைப்
    பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்குங்
குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக்
    கொடுகொட்டி கொண்தோர் கையாள் றன்னை
விழவனை வீரட்ட மேவி னானை
    விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை
அழகனை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்ந்த வாறே.
6
சூளா மணிசேர் முடியான் றன்னைச்
    சுண்ணவெண் ணீறணிந்த சோதி யானைக்
கோள்வா யரவ மசைத்தான் றன்னைக்
    கொல்புலித்தோ லாடைக் குழகன் றன்னை
நாள்வாயும் பத்தர் மனத்து ளானை
    நம்பனை நக்கனை முக்க ணானை
ஆள்வானை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்ந்த வாறே.
7
முத்தினை மணிதன்னை மாணிக் கத்தை
    மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக்
கொத்தினை வயிரத்தைக் கொல்லே றூர்ந்து
    கோளரவொன் றாட்டுங் குழகன் றன்னைப்
பத்தனைப் பத்தர் மனத்து ளானைப்
    பரிதிபோற் றிருமேனி உடையான் றன்னை
அத்தனை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்ந்த வாறே.
8
பையா டரவங்கை யேந்தி னானைப்
    பரிதிபோற் றிருமேனிப் பால்நீற் றானை
நெய்யாடு திருமேனி நிமலன் றன்னை
    நெற்றிமேல் மற்றொருகண் நிறைவித் தானைச்
செய்யானைச் செழும்பவளத் திரளொப் பானைச்
    செஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானை
    அறியா தடிநாயேன் அயர்ந்த வாறே.
9
சீரார் முடிபத் துடையான் றன்னைத்
    தேசழியத் திருவிரலாற் சிதைய நூக்கிப்
பேரார் பெருமை கொடுத்தான் றன்னைப்
    பெண்ணிரண்டு மாணுமாய் நின்றான் றன்னைப்
போரார் புரங்கள் புரள நூறும்
    புண்ணியன் வெண்ணீ றணிந்தான் றன்னை
ஆரானை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்ந்த வாறே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.30 திருவாரூர் - திருத்தாண்டகம்
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண்
    ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்
வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண்
    வளர்மதிசேர் கண்ணியான்காண் வானோர் வேண்ட
அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண்
    அனலாடி யானஞ்சு மாடி னான்காண்
செம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரிற்
    றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
1
அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும்
    ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்
கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை
    குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித்
தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் செல்லுந்
    தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்துந்
திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரிற்
    றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
2
நீரேறு சடைமுடியெந் நிமலன் றான்காண்
    நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தான்காண்
வாரேறு வன்முலையாள் பாகத் தான்காண்
    வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண்
காரேறு முகிலனைய கண்டத் தான்காண்
    கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண்
சீரேறு மணிமாடத் திருவா ரூரிற்
    றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
3
கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண்
    கற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண்
ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண்
    உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண்
ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண்
    ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண்
தேனேறு மலர்ச்சோலைத் திருவா ரூரிற்
    றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
4
பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்
    பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண்
மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண்
    வானவரு மறியாத நெறிதந் தான்காண்
நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல
    நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்குந் திருவா ரூரிற்
    றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
5
சங்கரன்காண் சக்கரமாற் கருள்செய் தான்காண்
    தருணேந்து சேகரன்காண் தலைவன் றான்காண்
அங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை
    அறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண்
எங்கள்பெரு மான்காணென் னிடர்கள் போக
    அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ்
செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரிற்
    றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
6
நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண்
    நான்மறையோ டாறங்க மாயி னான்காண்
மின்றிகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண்
    வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண்
துன்றுபொழிற் கச்சியே கம்பன் றான்காண்
    சோற்றுத் துறையான்காண் சோலை சூழ்ந்த
தென்றலார் மணங்கமழுந் திருவா ரூரிற்
    றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
7
பொன்னலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண்
    புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்
மின்னலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண்
    வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண்
கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண்
    கோலமா நீறணிந்த மேனி யான்காண்
செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரிற்
    றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
8
விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
    வேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண்
மண்டலத்தி லொளிவளர விளங்கி னான்காண்
    வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண்
புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப்
    புத்தேளுங் காண்பரிய புராணன் றான்காண்
தெண்டிரைநீர் வயற்புடைசூழ் திருவா ரூரிற்
    றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
9
செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண்
    தென்னானைக் காவன்காண் தீயில் வீழ
மருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
    வஞ்சகர்பா லணுகாத மைந்தன் றான்காண்
அருவரையை எடுத்தவன்றன் சிரங்கள் பத்தும்
    ஐந்நான்கு தோளுநெரிந் தலற வன்று
திருவிரலா டர்த்தவன்காண் திருவா ரூரிற்
    றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.31 திருவாரூர் - திருத்தாண்டகம்
இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
    ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றுஞ்
சுடரொளியா யுள்விளங்கு சோதீ யென்றுந்
    தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றும்
கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங்
    கலைமான் மறியேந்து கையா வென்றும்
அடல்விடையாய் ஆரமுதே ஆதீ யென்றும்
    ஆரூரா வென்றென்றே அலறா நில்லே.
1
செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்
    சிந்தித்தே நெஞ்சமே திண்ண மாகப்
பொடியேறு திருமேனி யுடையா யென்றும்
    புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும்
அடியேனை யாளாகக் கொண்டா யென்றும்
    அம்மானே ஆரூரெம் மரசே யென்றும்
கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங்
    கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.
2
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
    நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குக்
புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப்
    பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
    சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும்
    ஆரூரா வென்றென்றே அலறா நில்லே.
3
புண்ணியமும் நன்னெறியு மாவ தெல்லாம்
    நெஞ்சமே இதுகண்டாய் பொருந்தக் கேள்நீ
நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா வென்றும்
    நுந்தாத வொண்சுடரே யென்று நாளும்
விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்
    விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி
எண்ணிரிய திருநாம முடையா யென்றும்
    எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே.
4
இழைத்தநாள் எல்லை கடப்ப தென்றால்
    இரவினோடு நண்பகலு மேத்தி வாழ்த்திப்
பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோ யென்றும்
    பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா வென்றும்
அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய்
    அணியாரூர் இடங்கொண்ட அழகா வென்றுங்
குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே
    குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே.
5
நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்
    நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச்
சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றுஞ்
    சிவலோக நெறிதந்த சிவனே யென்றும்
பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்
    புண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத்
தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந்
    திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே.
6
பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டிற்
    பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டிற்
சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டிற்
    சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்
    உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும்
புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும்
    பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே.
7
மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக
    வழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதீ யென்றும்
    அம்மானே ஆரூரெம் மையா வென்றுந்
துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச்
    சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக்
கதிர்மதிசேர் சென்னியனே கால காலா
    கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.
8
பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே
    பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா
தேசத் தொளிவிளக்கே தேவ தேவே
    தீரூவாரூர்த் திருமூலட் டானா வென்றும்
நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி
    நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று
ஏசற்று நின்றிமையோ ரேறே யென்றும்
    எம்பெருமா னென்றென்றே ஏத்தா நில்லே.
9
புலன்களைந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்
    புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
சலங்கொள்சடை முடியுடைய தலைவா வென்றுந்
    தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும்
இலங்கையர்கோன் சிரநெரித்த இறைவா வென்றும்
    எழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும்
நலங்கொளடி என்றலைமேல் வைத்தா யென்றும்
    நாடோறும் நவின்றேத்தாய் நன்மை யாமே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.32 திருவாரூர் - போற்றித் திருத்தாண்டகம்
கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
    கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி
    அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி
    வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
    திருமூலட் டானனே போற்றி போற்றி.
1
வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி
    மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
    கொல்புலித்தோ லாடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
    ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
    திருமூலட் டானனே போற்றி போற்றி.
2
மலையான் மடந்தை மணாளா போற்றி
    மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்நெஞ்சில் நின்றாய் போற்றி
    நெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவே லேந்தீ போற்றி
    ஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
    திருமூலட் டானனே போற்றி போற்றி.
3
பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
    பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி
    மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
    உலகுக் கொருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
    திருமூலட் டானனே போற்றி போற்றி.
4
நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
    நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
    வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி
    தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
    திருமூலட் டானனே போற்றி போற்றி.
5
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
    சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
    புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
    அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
    திருமூலட் டானனே போற்றி போற்றி.
6
வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
    வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
    குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி
    நால்வேத மாறங்க மானாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
    திருமூலட் டானனே போற்றி போற்றி.
7
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
    உகப்பார் மனத்தென்றும் நிங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
    வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
    மேலோர்க்கு மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
    திருமூலட் டானனே போற்றி போற்றி.
8
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
    புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
    திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
    சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
    திருமூலட் டானனே போற்றி போற்றி.
9
பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி
    பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி
    காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க் கரசே போற்றி
    அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
    திருமூலட் டானனே போற்றி போற்றி.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.34 திருவாரூர் - திருத்தாண்டகம்
ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
    ஓருருவே மூவுருவ மான நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
    காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ
    மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
    திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
1
மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ
    வானவரை வலியமுத மூட்டி யந்நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ
    நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ
    அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ
சிலையால்முப் புரமெரித்த முன்னோ பின்னோ
    திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
2
பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்
    நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில்வாங்கி யெய்த நாளோ
    விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
    மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
    அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
3
ஓங்கி யுயர்ந்தெழுந்து நின்ற நாளோ
    ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ
தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த
    தக்கன்றன் பெருவேள்வி தகர்த்த நாளோ
நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு
    நில்லாயெம் பெருமானே யென்றங் கேத்தி
வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
    வளராரூர் கோயிலாக் கொண்ட நாளே.
4
பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே
    பணிவார்கட் கங்கங்கே பற்றா னானே
நீலமா மணிகண்டத் தெண்டோ ளானே
    நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ்
சீலமே சிவலோக நெறியே யாகுஞ்
    சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
    குளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே.
5
திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச்
    சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ
மறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து
    மாமுனிவர்க் கருள்செய்தங் கிருந்டத நாளோ
பிறங்கியசீர்ப் பிரமன்றன் தலைகை யேந்திப்
    பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ
அறம்பலவு முரைப்பதற்கு முன்னோ பின்னோ
    அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
6
நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ
    நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக்
கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ
    காரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று
வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ
    வாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச்
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ
    தண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
7
பாதத்தால் முயலகனைப் பாது காத்துப்
    பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங்
    கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ
பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்
    பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ
    விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
8
புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்
    பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டும்
கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்
    கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்
நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்
    நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டும்
திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
    திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
9
ஈசனா யுலகேழும் மலையு மாகி
    இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ
வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ
    மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ
தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ
    சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ
தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ
    திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com